மருமகன் ஆகாஷ் ஆனந்த் அரசியல் வாரிசு: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்வது குறித்து, மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சிக் கூட்டம் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தனது அரசியல் வாரிசாகஆகாஷ் ஆனந்தை அறிவித்தார்.

மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த். அவருக்கு தற்போது 28வயதாகிறது. 2017-ம் ஆண்டு நடைபெற்ற உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் மாயாவதியுடன் இணைந்து செயல்பட்டார்.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய முகமாக ஆகாஷ் ஆனந்த் அறியப்பட்டார். கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளாராக அவர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரை அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த உதய்வீர் சிங் கூறுகையில், மாயாவதி தனது அரசியல்வாரிசாக ஆகாஷ் ஆனந்தை அறிவித்துள்ளார். எங்கள் கட்சிக்கு இளம் தலைவர் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆகாஷ் ஆனந்த் கட்சியை மேம்படுத்துவார். உத்தர பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் கட்சியைமாயாவதியும், மற்ற மாநிலங்களில் ஆகாஷ் ஆனந்தும் முன்னின்று வழி நடத்துவார்கள் என்று தெரிவித்தார்.

மாயாவதிக்கு தற்போது 67 வயதாகிறது. அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. மற்ற கட்சிகளில் நிலவும் குடும்ப அரசியலை அவர் விமர்சித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது அவரது கட்சியிலும் குடும்ப அரசியல் தலைதூக்கியுள்ளது என்று எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், “ஆகாஷ் ஆனந்தை எனது குடும்ப உறுப்பினராக கருதாதீர்கள். அவரை கட்சி தொண்டராகவே பாருங்கள்” என்று மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE