நிலுவையை வழங்க முடியாவிட்டால் ஆட்சியில் இருந்து விலகி விடுங்கள்: மத்திய அரசு மீது மம்தா விமர்சனம்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் அலிபுருதுவார் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மம்தா பானர்ஜி ரூ.96 கோடி மதிப்பில் 70 திட்டங்களை அறிவித்தார். அப்போது அவர் மேற்குவங்க அரசு மேற்கொண்டு வரும் நலத்திட்டங்கள் குறித்தும், அம்மாநிலத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை குறித்தும் மக்களிடம் உரையாற்றினார்.

“நூறு நாள் வேலைத் திட்டம், வீட்டு வசதித் திட்டம் உட்பட பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு இன்னும் முழுமையாக மேற்குவங்க மாநிலத்துக்கு விடுவிக்கவில்லை. மொத்தம் ரூ.1.15 லட்சம் கோடி நிலுவை உள்ளது. இந்த நிலுவையை மத்திய அரசு உடனடியாக வழங்கினால், மேற்கு வங்கத்தில் இன்னும் பல நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும்.

என்னுடைய அரசு, பாஜக போல் இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கி செயல்படுகிறது. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் பட்டாவும் வீடு கட்ட ரூ.1.2 லட்சமும் வழங்கப்படும். பழங்குடி மக்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

மேற்குவங்க மாநிலத்துக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையென்றால், ஆட்சியிலிருந்து விலக வேண்டும்.

நம் மாநிலத்துக்கான நிதியை பெறுவதற்கு, பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கோரியுள்ளேன். டிசம்பர் 18-20 தேதிகளில் டெல்லி சென்று இது தொடர்பாக விவாதிப்பேன்” என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE