ஒடிசா மதுபான நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக சோதனை: காங்கிரஸ் எம்.பி.க்கு சொந்தமான ரூ.290 கோடி பறிமுதல்

By செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: ஒடிசா, ஜார்க்கண்ட், மற்றும் மேற்குவங்கத்தில் பால்டியோ சாகு குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று 4-வது நாளாக சோதனை நடத்தினர். இதுவரை ரூ.290 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பணம் எண்ணும் பணி தொடர்கிறது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி தீரஜ் குமார் சாகு. இவர் தொடர்புடைய பால்டியோ சாகு குழுமத்துக்கு மேற்கு ஒடிசாவில் பவுத் டிஸ்டிலெரி என்ற மதுபான ஆலை உள்ளது. மிகப் பெரியளவில் மதுபானங்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனமும் ஒன்று. பால்டியோ சாகு குழுமத்தினர் வரி ஏய்ப்பு செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து, ஒடிசாவின் சம்பல்பூர், ரூர்கேலா, பொலாங்கிர், சுந்தர்கர் மற்றும் புவனேஸ்வரில் இந்த குழுமத்துக்கு சொந்தமான இடங்களிலும், ஜார்க்கண்ட்டில் எம்.பி. தீரஜ்குமாருக்கு சொந்தமான இடங்களிலும், மேற்கு வங்கத்தில் உள்ள அலுவலகங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக சோதனை நடத்தினர்.

இதில் நேற்று வரை 176 பணமூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை ஒடிசாவின் பொலாங்கிரில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு எண்ணப்பட்டன. அதில் ரூ.290 கோடி இருந்தது. பெரும்பாலும் ரூ.500 கட்டுகளாக இருந்தன. தொடர்ந்து பணத்தை எண்ணியதால், பணம் என்றும் இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் பல வங்கிகளில் இருந்துபணம் எண்ணும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு எண்ணப்படுகின்றன. 3 இடங்களில் 7அறைகளில் மற்றும் 9 லாக்கர்களில் உள்ள பணம் இன்னும் எண்ணப்படவில்லை. அலமாரிகள் மற்றும் பர்னிச்சர்களில் இந்தப்பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இன்னும் பல இடங்களில், நகை, பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவற்றை எண்ணி முடித்தபின், பறிமுதல் பணத்தின் மொத்த தொகை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இந்த சோதனையில் வருமானவரித்துறை அதிகாரிகள் 150 பேர்ஈடுபட்டுள்ளனர். ஹைதராபாத்தில் இருந்து 20 அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு மது ஆலையின் டிஜிட்டல் ஆவணங்களை சரிபார்க்கும் சோதனை நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE