செங்கல்பட்டு, கர்நாடகாவில் லேசான நில அதிர்வு: தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திலும், கர்நாடகாவின் விஜயபுரா பகுதியிலும் இன்று (டிச.8) அதிகாலை லேசான நில அதிர்வு உணரபப்ட்டுள்ளது. ரிக்டரில் இது முறையே 3.2 மற்றும் 3.1 எனப் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 4.5 ரிக்டருக்கு மேல் நிலநடுக்கத்தின் தாக்கம் இருக்கும்போதுதான் கட்டிட சேதங்கள் போன்றவை ஏற்படும் என்பதால் இந்த நில அதிர்வால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று தெரிகிறது.

செங்கல்பட்டில் காலை 7.39 மணிக்கு நில அதிர்வு பதிவாகியுள்ளது. இது பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. செங்கல்பட்டைத் தொடர்ந்து ஆம்பூர், திருப்பத்தூர் பகுதிகளிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவின் விஜயபுராவில் இன்று காலை 6.52 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதுவும் பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் பதிவாகியிருந்தது. அதன் தாக்கம் 3.1 ரிக்டர் என்று தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று அசாம், மியான்மார், ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE