11 பேர் கொண்ட புதிய அமைச்சரவை; தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு - கார்கே, சோனியா குடும்பத்தினர் பங்கேற்பு

By என். மகேஷ்குமார்

ஹைதராபாத்: தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ரேவந்த் ரெட்டி அம்மாநிலத்தின் புதிய முதல்வராக நேற்று பதவிஏற்றுக்கொண்டார். மேலும், சபாநாயகர், துணை முதல்வர், அமைச்சர்கள் என மேலும் 11 பேர் பதவி பிரமாணம் செய்து கொண்டனர். பிரம்மாண்டமாக நடந்த இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேசியதலைவர் மல்லிகார்ஜுன கார்கே,மற்றும் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள119 தொகுதிகளில் 65 தொகுதிகளைகாங்கிரஸ் கைப்பற்றி தனி பெரும்பான்மை பெற்றது. இதனை தொடர்ந்து யார் முதல்வராக பதவிஏற்பது எனும் பிரச்சினை தலைதூக்கியது. இந்த விவகாரத்தை மேற்பார்வையிட கர்நாடக மாநிலதுணை முதல்வர் டி.கே. சிவக்குமாரை காங்கிரஸ் கட்சி மேலிடம் நியமனம் செய்தது. அதன் படி, டி.கே. சிவக்குமார், தெலங்கானா காங்கிரஸாரிடம் கருத்துக்களை சேகரித்து அதனை டெல்லியில் உள்ள கட்சி மேலிடத்துக்கு எடுத்துகூறினார். அதன் பின்னர், தெலங்கானாவில் உள்ள மூத்த காங்கிரஸாரை கட்சி மேலிடம் டெல்லி வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் சுமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து, தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைவராக, திறன்பட செயல்பட்டு, கட்சியை அம்மாநிலத்தில் அரியணையில் ஏற்ற அரும்பாடு பட்ட ரேவந்த் ரெட்டியை முதல்வராக நியமனம் செய்வது எனும் ஒருமித்த கருத்தோடு, ரேவந்த் ரெட்டியின் பெயரை கடந்த செவ்வாய் கிழமை இரவு அறிவித்தது.

இதனை தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் ஸ்டேடியத்தில், புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பதவிபிரமாண விழா நேற்று பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவுக்கு டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ்ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், மூத்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், 64 எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸின் ஆதரவாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். நேற்று மதியம் சரியாக 1.04 மணிக்கு தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது முதல்வராக பதவியேற்ற ரேவந்த் ரெட்டி,கடவுள் மீது ஆணையாக, என பிரமாணம் செய்தார். இவரை தொடர்ந்து, துணை முதல்வராக பட்டி விக்ரமார்க்கா மற்றும் தாமோதர ராஜநரசிம்மா, கோமிட்டி ரெட்டி வெங்கட் ரெட்டி, தர் பாபு, நிவாஸ் ரெட்டி, பொன்னம் பிரபாகர், கொண்டா சுரேகா, சீதக்கா, தும்மல நாகேஸ்வர ராவ், ஜூபல்லி கிருஷ்ணா ராவ் ஆகிய 10 பேர் அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்து கொண்டனர். இதில் தர்பாபு சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரேவந்த் ரெட்டி பதவி பிரமாணம் செய்து கொண்டதும், முதலில், தேர்தலில் காங்கிரஸ் அளித்த முக்கிய 6 வாக்குறுதிகளுக்கான கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி, பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 மாதஉதவி தொகை, மாநிலம் முழுவதும்பெண்களுக்கு இலவச பஸ் பயணம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ. 16,000 முதலீட்டு நிதி உதவி, ரூ. 500-க்குசமையல் கேஸ் சிலிண்டர், ஏழைகளுக்கு ரூ. 10 லட்சம் வரை ராஜீவ்ஆரோக்கிய திட்டத்தில் இலவச மருத்துவ சேவை போன்ற திட்டங்களுக்கான கோப்பில் முதல்வர் ரேவந்த் ரெட்டி கையெழுத்திட்டார்.

மாற்றுத்திறனாளிக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ரேவந்த் ரெட்டி: தெலங்கானா முதல்வராக நேற்றுபதவி ஏற்ற ரேவந்த் ரெட்டி, தான்கொடுத்த வாக்கை ஆயிரக்கணக்கான மக்கள் முன் நிறைவேற்றி காட்டினார்.

இவர் தேர்தலுக்கு முன் ஹைதராபாத்தில் கட்சி அலுவலகத்தில் ரஜினி எனும் மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், ஹைதராபாத் நாம்பல்லி தொகுதியை சேர்ந்த இவரின் தந்தை வெங்கடசாமி ஓய்வு பெற்ற 4-ம் நிலை அரசு ஊழியர். அவரின் மூத்த மகள் தான் இந்த ரஜினி. மாற்றுத் திறனாளியான இவர் பட்ட மேற்படிப்பு வரை படித்துள்ளார். ஆயினும் யாரும் இவருக்கு வேலை வழங்க மறுப்பதாகவும், இதனால் அவரின் குடும்பம்வறுமையில் வாடுவதாகவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் உனக்கு வேலை வழங்குவேன் என ரேவந்த் ரெட்டி தேர்தலுக்கு முன் ரஜினிக்கு வாக்கு கொடுத்திருந்தார். அதன்படி, தனது பதவி ஏற்பு விழாவுக்கு வரும்படி ரேவந்த் ரெட்டி ரஜினிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி விழா மேடையில் ரஜினியை அழைத்து அவருக்கு அரசு வேலைக்கான நியமன உத்தரவை ரேவந்த் ரெட்டி வழங்கினார். ரேவந்த் ரெட்டியின் மனித நேயத்தை பலர் புகழ்ந்து வருகின்றனர்.

ரேவந்த் ரெட்டிக்கு ஸ்டாலின் வாழ்த்து: தெலங்கானா சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து, அக்கட்சியின் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி முதல்வராக நேற்று பதவியேற்றார். அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில்,‘தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் நடந்த தொலைபேசிஉரையாடலில் அவருக்கு என் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும்தெரிவித்தேன். முதல்வராக அவரது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைந்து நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வாழ்த்துகிறேன்’ என்றார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

47 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்