திரிபுராவில் வழக்குகளுக்கு தீர்வு காணாத 8 காவலருக்கு சம்பளம் நிறுத்தம்

By செய்திப்பிரிவு

அகர்தலா: திரிபுரா மாநிலத்தின் செபாஹி ஜாலா மாவட்டத்தில் நிர்ணயிக்கப் பட்ட இலக்கில் வழக்குகளுக்கு தீர்வு காணத் தவறிய 8 காவ லர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை கண்காணிப்பாளர் பி.ஜே.ரெட்டி கூறியதாவது:

பிஷால்கர் காவல் நிலையத்தில் பணியாற்றும் 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் (எஸ்ஐக்கள்) மற்றும் மூன்று உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் (ஏஎஸ்ஐக்கள்) கடந்த மூன்று மாதங்களாக வழக்குகளை தீர்க்கும் இலக்கை அடையத் தவறிவிட்டனர். மேலதிகாரிகளின் உத்தரவை தொடர்ந்து மீறுவதுடன், பணியிலும் அலட்சியம் காட்டியுள்ளனர்.

இதையடுத்து, அந்த 8 காவலர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 18 வழக்குகளை முடிக்க வேண்டும் என அவர்களுக்கு இலக்கு கொடுக்கப்பட்ட நிலையில், மூன்று வழக்குகளில் மட்டுமே அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வங்கதேசத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் செபாஹிஜாலா மாவட்டத்தில், போதை மருந்து மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகள் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் அதிக அளவில் நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE