புதுடெல்லி: மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாக்க பிரதமர் மோடியின் அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என முதல்வர் ஸ்டாலினிடம் உறுதி அளித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார்.
“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி ஆகியோரிடம் பேசினேன். மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள சவாலான சூழலை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தேன். மக்களை பாதுகாக்க பிரதமர் மோடியின் அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என உறுதியளித்தேன். ஏற்கெனவே தேசிய மீட்பு படையினர் போதுமான எண்ணிக்கையில் அங்கே முகாமிட்டுள்ளனர். கூடுதல் படையினரும் தயார் நிலையில் உள்ளனர்” என அமைச்சர் அமித்ஷா ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக, மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை அனுப்பிவைக்க முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொண்ட பிறகு பாதிப்புகள் குறித்து உரிய கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு தேவைப்படும் உதவிகள் மத்திய அரசிடம் கேட்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.