மக்கள் மருந்தகம் எண்ணிக்கை 25,000 ஆக அதிகரிக்கிறது: திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதிலும் மக்கள் மருந்தகம் எண்ணிக்கையை 10,000-ல்இருந்து, 25,000 ஆக உயர்த்தும் திட்டம், மகளிர் ட்ரோன் திட்டம் ஆகியவற்றை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மத்திய அரசின் முன்னணி திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், அவற்றை மேலும் செறிவூட்டும் நோக்கில் ‘வளர்ந்த இந்தியா சபத யாத்திரை’ (விக்‌ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா) நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசு திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில், 10,000-வது மக்கள் மருந்தகத்தை, ஜார்கண்ட் மாநிலத்தின் தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் தொடங்கி வைத்தார். மக்கள் மருந்தகங்கள் எண்ணிக்கையை 10,000-ல் இருந்து 25,000 ஆக அதிகரிக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

மேலும், மகளிர் ட்ரோன் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இத்திட்டம் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில், தேர்வு செய்யப்பட்ட 15,000 மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ட்ரோன்களும், இவற்றை இயக்க பயிற்சியும் அளிக்கப்படும். அதன்பிறகு, விவசாய பணிகளுக்கு ட்ரோன்கள் வாடகைக்கு விடப்படும். ‘‘இதன்மூலம் ட்ரோன்களை இயக்கும் பெண் பைலட்களுக்கு கிராமங்களில் மரியாதை கிடைக்கும். அவர்களின் நிதி நிலையும் மேம்படும். என்னை பொருத்தவரை, ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள்தான் 4 மிகப் பெரிய சாதியினர். இவர்களின் வளர்ச்சிதான் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும்’’ என்று விழாவில் பிரதமர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE