கொல்லம்: கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி மீட்கப்பட்டார். அவரைக் கடத்திச் சென்ற மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
அபிகெய்ல் சாரா ரெஜி என்ற 6 வயது சிறுமி கொல்லம் மாவட்டம் உய்யூரில் இருந்து இன்று காலை கடத்தப்பட்டார். சிறுமி கடத்தல் குறித்து பெற்றோர் போலீஸில் புகார் கொடுக்க, போலீஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனர். சிறுமி கடத்தப்பட்ட செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானது. சிறுமியைக் காப்பாற்ற கேரளா - தமிழக எல்லைகளிலும் போலீஸார் கண்காணிப்பை அதிகரித்தனர்.
இந்நிலையில், மதியம் 1.30 மணியளவில் கொல்லம் ஆஸ்ரம் மைதானம் அருகே சிறுமி ஒருவர் தனியாகத் திரிந்துள்ளார். சிறுமி குறித்து பொதுமக்கள் கொடுத்தத் தகவலின் பேரில் கொல்லம் கிழக்கு போலீஸார் அவரை மீட்டனர். சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் சிறுமி அவர்களிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.