பல்கலைக்கழக இசை நிகழ்ச்சியில் 4 மாணவர்கள் உயிரிழப்பு: விசாரணை நடத்த கேரள முதல்வர் பினராயி உத்தரவு

By செய்திப்பிரிவு

கொச்சி: கேரள மாநிலம் களமசேரியில் அமைந்துள்ள கொச்சி பல்கலைக்கழகத்தில், நேற்றுமுன்தினம் பாடகி நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சி நடந்தது.

இசை நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு வெளியே நிறைய மாணவர்கள் நின்றிருந்ததாகவும், அந்த சமயத்தில் மழை பெய்ததால் மாணவர்கள் கூட்டமாக அரங்கத்தினுள் நுழைய முயன்றனர் என்றும்கூறப்படுகிறது. அப்போது நெரிசல்அதிகமாகி 4 மாணவர்கள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர்காயமடைந்துள்ளனர். இந்நிகழ்வு குறித்து அதிகாரிகள் கூறுகையில், “நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் ஒரே வாசலே இருந்துள்ளது. இதனால், மாணவர்கள் அரங்கில் நுழைந்தபோது நெரிசல் அதிமாகியுள்ளது. இதனால், மாணவர்கள் ஒருவர் மேல் ஒருவர் சரிந்து விழுந்தனர்” என்று தெரிவித்தனர்.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கூறுகையில், “பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் கலைநிகழ்ச்சி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. பாடகி நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சியும் அவற்றில் ஒன்று. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க அருகில் உள்ள கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் வருகை தந்தனர். 2,000 மாணவர்கள் கூடினர். எதிர்பார்த்ததை விடஅதிக எண்ணிக்கை இது. மழைபெய்ததால் மாணவர்கள் கூட்டமாக நகர்ந்தனர். இதன் காரணமாக நெரிசல் அதிகமானது” என்று குறிப்பிட்டார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்தெரிவித்தார். “இந்தச் சம்பவம்பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE