‘விபத்து’ வழக்கில் திருப்பம்: தந்தை அடித்து கொல்லப்பட்டதை சிசிடிவி மூலம் நிரூபித்த மகன் @ பெங்களூரு

By இரா.வினோத்


பெங்களூரு: பெங்களூருவில் 77 வயதான முதியவர் சாலையில் ஏற்பட்ட பிரச்சினையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அவரது மகன் சிசிடிவி வீடியோ மூலம் நிரூபித்துள்ளார். இதனால் முதியவரை தாக்கிய 35 வயதான நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள குட்டஹள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (77). இவர் கடந்த 15-ம் தேதி இரவு 9 மணியளவில் மருந்தகத்துக்கு மாத்திரை வாங்க சென்றுள்ளார். அப்போது தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் கிருஷ்ணப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வயாலிகாவல் போலீஸார், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் பலியானதாக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், அவரது மகன் சதீஷ்குமாருக்கு தந்தையின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கடந்த 17-ம் தேதி விபத்து நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில், ச‌ம்பவத்தன்று கிருஷ்ணப்பா சாலையில் சென்ற போது எதிரில் வந்த வாகனத்தின் மீது லேசாக மோதுகிறார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த வாகன ஓட்டி கிருஷ்ணப்பாவை கல்லால் அடித்துவிட்டு, அங்கிருந்து சென்று விடுவது பதிவாகி இருக்கிறது.

இதையடுத்து, சதீஷ்குமார் வயாலிகாவல் காவல் நிலையத்தில் தனது தந்தை கிருஷ்ணப்பா வாகன ஓட்டி ஒருவரால் தாக்கப்பட்டதாலே உயிரிழந்தார். இதனை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி கேமிரா வீடியோவையும் ஒப்படைத்தார்.

இதையடுத்து போலீஸார் இவ்வழக்கை மறுவிசாரணை செய்த போது, சர்ஃபரஸ் கான் (37) என்பவர் கிருஷ்ணப்பாவை தாக்கியது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு சிறிது தூரம் சென்ற நிலையில் கிருஷ்ணப்பா நிலை தடுமாறிகிறார். அப்போது அவரை மீட்ட சிலர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி கிருஷ்ணப்பா உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸார் விபத்து என பதிவு செய்யப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றி சர்ஃபரஸ் கானை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீஸாருக்கு போதிய ஆதாரங்களை திரட்டி கொடுத்த கிருஷ்ணப்பாவின் மகன் சதீஷ்குமாரையும் பாராட்டியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE