கர்நாடகாவில் முருகா மடாதிபதி மீண்டும் போக்சோ வழக்கில் கைது

By இரா.வினோத்


பெங்களூரு: போக்சோ வழக்கில் கைதாகி நவ.16 ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்த முருகா மடாதிபதி ஸ்ரீசிவமூர்த்தி முருக ஷரணரு மீண்டும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுருக ராஜேந்திரா மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் ஸ்ரீசிவமூர்த்தி முருக ஷரணரு. கடந்த ஆண்டு இவரது மடத்தின் சார்பில் நடத்தப்படும் விடுதியில் தங்கி படித்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மடாதிபதி மீது பாலியல் பலாத்காரம் மற்றும் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மடாதிபதி ஸ்ரீசிவமூர்த்தி முருக ஷரணரு ஓராண்டுகள் சித்ரதுர்கா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் கடந்த 16ம் தேதி ஜாமீனில் வெளியே வந்து, மடத்தில் தங்கி இருந்தார். இந்நிலையில் மற்றொரு போக்சோ வழக்கை விசாரித்த சித்ரதுர்கா மாவட்ட அமர்வு நீதிமன்றம் மடாதிபதிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இதையடுத்து போலீஸார் நேற்று முன் தினம் மாலையில் சித்ரதுர்கா மட‌த்தில் தங்கியிருந்த மடாதிபதி ஸ்ரீசிவமூர்த்தி முருக ஷரணருவை கைது செய்த‌னர். அப்போது அவரது வழக்கறிஞர்களும், சீடர்களும் பிடிவாரண்ட் குறித்து கேள்வி எழுப்பினர். இதனால் போலீஸாருக்கும் சீடர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE