புதுடெல்லி: டெல்லி தேசிய தலைநகரப் பிராந்தியம் மற்றும் பஞ்சாபில் விவசாயிகள் பயிர்க்கழிவை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கடந்த 6 ஆண்டுகளில் மிகவும் மாசுபட்ட நவம்பராக இம்மாதம் உள்ளது. பிரச்சினை என்னவென்று நன்கு தெரிகிறது. பயிர்க்கழிவு எரிப்பதை கட்டுப்படுத்துவது உங்கள் வேலை. அதை எப்படி செய்வது என்று சொல்வது நீதிமன்றத்தின் வேலை அல்ல. விவசாயிகள் வில்லனாக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் பிரச்சினைகளுக்கு அரசு செவிசாய்ப்பதில்லை. கணிசமாக நிலம் வைத்திருப்பவர்களுக்கு இயந்திர அறுவடை கருவிகள் கிடைக்கின்றன. ஆனால் சிறு விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிக்கின்றனர். ஏழை விவசாயிகள் இயந்திரங்கள் வாங்க அரசு நிதியளிக்க வேண்டும். இது அரசின் கடமை. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.