அயோத்திக்கு இலவச பயண ஏற்பாடு: பாஜக வாக்குறுதிக்கு உத்தவ் தாக்கரே ஆட்சேபம்

By செய்திப்பிரிவு

மும்பை: மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 13-ம் தேதி விதிஷா மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, “உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்படும் ராமர்கோயிலில் குழந்தை ராமர் சிலை ஜனவரி 22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ம.பி.யில்மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தால், இங்குள்ள மக்களை புதிய அரசு படிப்படியாக அயோத்திக்கு இலவசமாக அழைத்துச் செல்லும்” என்றார். மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் இதுபோன்ற வாக்குறுதியை ம.பி. தேர்தல் பிரச்சாரத்தில் அளித்தார்.

இதற்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சி எழுதியுள்ள கடிதத்தில் பாஜகவுக்கு ஆதரவாக இரட்டை நிலைப்பாட்டை ஆணையம் கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து உத்தவ் தாக்கரேநேற்று மும்பையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த 1987-ல் மகாராஷ்டிராவின் விலே பார்லே பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் இந்துத்துவா அடிப்படையில் பிரச்சாரம் செய்ததால் சிவசேனா தலைவர் பால் தாக்ரேவின் வாக்குரிமையை தேர்தல் ஆணையம் அப்போது ரத்து செய்தது.

ஆனால் தற்போது தேர்தல்நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாக கருதுகிறோம். பந்தை நன்கு அடித்து விளையாட பாஜகவை அனுமதித்து விட்டு எங்களை விக்கெட் எடுக்க விடாமல்தடுப்பது, தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்துவது ஆகாது” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில், “காங்கிரஸ் கட்சியைதண்டிக்க மக்கள் வாக்களிக்கும்போது 'ஜெய் பஜரங்பலி' என்று கூறவேண்டும்” என கேட்டுக்கொண்டார். இதுபற்றியும் உத்தவ் தாக்கரேதனது பேட்டியில் குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE