ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 36 பேர் உயிரிழப்பு: மீட்புப் பணிகள் தீவிரம்

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். இதனை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உறுதி செய்துள்ளார். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் படோடி - கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென 300 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து பள்ளத்தில் உருண்டு கீழே விழுந்ததில், அதில் இருந்த 36 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இதனை உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தோடா மாவட்ட ஆட்சியர் ஹர்விந்தர் சிங் உடன் தொலைபேசியில் பேசினேன். இந்த விபத்தில் துரதிருஷ்டவசமாக 36 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்க ஹெலிகாப்டருக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள தோடா அரசு மருத்துவமனை மற்றும் ஜம்முவில் உள்ள பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்" என தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள், "JK02CN-6555 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து 55 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்து ட்ரங்கல் - அஸ்ஸார் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 300 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது" என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE