உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்தில் சிக்கிய 40 பேரையும் மீட்பது எப்போது? - சக தொழிலாளர்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

டேராடூன்: உத்தராகண்ட மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சுரங்கப் பாதை விபத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் புதிய நிலச்சரிவால் சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், உள்ளே சிக்கியிருப்பவர்களை விரைவாக மீட்க வேண்டும் என்று சக தொழிலாளர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு - பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். பல்வேறு துறைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 4-வது நாளாக இன்றும் (புதன்கிழமை) நடந்து வருகிறது. தீவிரமாக நடந்து வரும் மீட்பு நடவடிக்கைகளில் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்ட புதிய நிலச்சரிவால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், சுரங்கப் பாதை விபத்து நடந்த இடத்தில் மற்ற சுரங்கத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களை விரைவாக மீட்கக் கோரி நடந்த இப்போராட்டத்தில், “எங்கள் ஆட்களை வெளியே எடுங்கள்” என்று முழக்கமிட்டனர்.

முன்னதாக, சுரங்கப்பாதை தோண்டும்போது ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணி 4-வது நாளாக புதன்கிழமை காலை தொடங்கியது. இடிபாடுகளுக்குள் எஃகு குழாய்களை செலுத்தி தொழிலளார்களை மீட்கும் விதமாக புதிய இயந்திரத்தை நிர்மாணிக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட புதிய நிலச்சரிவு காரணமாக மீட்புப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், மீட்புப் பணிகளில் ஈடுப்பட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இடிபாடுகளுக்குள் குழாய்களை புகுத்தி அதன்வழியாக தொழிலாளர்களை மீட்கும் பணிகளைப் பார்வையிட்ட பின் உத்தரகாசி மாவட்ட ஆட்சியர் அபிஷேக் ரூகேலா கூறும்போது, "துளையிடும் இயந்திரத்தின் உதவியுடன் குழாய்களை இடிபாடுகளுக்குள் உள்ளே செலுத்தி உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தொடங்கியுள்ளது. அனைத்தும் திட்டமிட்டபடி சரியாக நடந்தால் உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் புதன் மாலைக்குள் மீட்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE