இடஒதுக்கீட்டை 65% ஆக உயர்த்தும் மசோதா - பிஹார் சட்டப்பேரவையில் தாக்கல்

By செய்திப்பிரிவு

பாட்னா: அரசு வேலை மற்றும் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்தும் வகையில் பிஹார் சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பிஹாரில் பட்டியலினத்தோர், பழங்குடியினத்தவர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு அளவை 65 சதவிகிதமாக உயர்த்த அம்மாநில அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கிய நிலையில், அம்மாநில சட்டப்பேரவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, பிஹார் சட்டப்பேரவையில், சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கை நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தாக்கல் செய்த முதல்வர் நிதிஷ் குமார், இடஒதுக்கீடு உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையிலேயே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அனுமதித்த 50 சதவீத இடஒதுக்கீடு என்ற உச்ச வரம்பையும் தாண்டி 65 சதவீதம் இடஒதுக்கீடு தர இந்த மசோதா வழிவகை செய்கிறது. பொருளாதார ரீதியாக பின் தங்கிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடும் இருப்பதால் பிஹாரின் புதிய இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்தால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மொத்தம் 75 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் சென்றுவிடும்.

புதிய சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு பிரேக் அப்:

> பட்டியலினத்தோர்: 20 சதவீதம்
> பழங்குடியினர்: 2 சதவீதம்
> இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்: 43 சதவீதம் என்ற வீதத்தில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

தற்போதைய சூழலில் பிஹாரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 18 சதவீதம், ஓபிசிக்களுக்கு 12 சதவீதம், பட்டியலினத்தோருக்கு 16 சதவீதம் மற்றும் பழங்குடியினத்தவருக்கு 1 சதவீதம், பிற்படுத்தப்பட்ட வகுப்பின் மகளிருக்கு 3 சதவீதம் என்று இடஒதுக்கீடு கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக எழுப்பிய குரல்: இந்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, மசோதாவில் 10 சதவீதம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு பற்றி ஏதும் குறிப்பிடப்படாதது குறித்து கேள்வி எழுப்பபட்டது. அந்த இடஒதுக்கீட்டில் எந்த ஒரு குழப்பமும் வந்துவிடக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE