“காசா மீதான இஸ்ரேலின் போரை இந்தியாவால் நிறுத்த முடியும்” - ஜோர்டான் தூதர் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை இந்தியாவால் நிறுத்த முடியும் என்று இந்தியாவுக்கான ஜோர்டான் தூதர் சலாம் ஜமீல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், "காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும், அதற்கேற்ப போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என்பதே ஜோர்டானின் நிலைப்பாடு. இதன்மூலம், காசாவில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்படும். ஏனெனில், காசாவைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 10,000-க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். இது தொடரக் கூடாது. அதேபோல், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். இதையே நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இதை முன்னிறுத்தியே, ஐ.நா பொதுச் சபையில் ஜோர்டான் தீர்மானம் கொண்டு வந்தது. நாங்கள் கொண்டு வந்த தீர்மானத்துக்கு 120 நாடுகள் ஆதரவு அளித்தன. 14 நாடுகள் எதிர்த்தன. 45 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இந்தியாவும் வாக்கெடுப்பை புறக்கணித்தது. அது, இந்தியாவின் முடிவு. இந்தியாவின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். புவி அரசியலில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும்.

ஜோர்டான் மன்னருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விவாதித்திருக்கிறார். காசாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. உலகில் இந்தியா ஒரு வளரும் சக்தி. சர்வதேச விவகாரங்கள் பலவற்றில் இந்தியா தலையிட்டுள்ளது. இந்தச் சூழலில், மேற்காசியாவில் நிலவி வரும் மோதலுக்குத் தீர்வு காண இந்தியா சிறந்த பங்களிப்பை அளிக்க முடியும். இதன்மூலம், உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்" என தெரிவித்தார்.

முன்னதாக, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா தனது 'அனைத்து திறன்களையும்' பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியை வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE