ஜாமீன் பெறும் தீவிரவாதிகள் காலில் ஜிபிஎஸ் கருவி: நாட்டில் முதல் முறையாக காஷ்மீரில் அறிமுகம்

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஜாமீனில் விடுதலையாகும் தீவிரவாதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் நடைமுறை தொடங்கப்பட்டு உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 14 சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் சுமார் 5,000 விசாரணைக் கைதிகள் உள்ளனர். இதில் 740 பேர் தீவிரவாத வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர். வழக்கு விசாரணையின்போது சில தீவிரவாதிகள் ஜாமீனில் விடுதலையாகின்றனர். அப்போது அவர்கள் தலைமறைவாகி மீண்டும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதை தடுக்க ஜாமீனில் விடுதலையாகும் தீவிரவாதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் நடைமுறையை காஷ்மீர் போலீஸார் தொடங்கி உள்ளனர்.

காஷ்மீரில் செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் குலாம் முகமது. தீவிரவாதிகளுக்கு நிதி,ஆயுத உதவிகளை வழங்கியது தொடர்பாக கடந்த 2007-ம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல ஆண்டுகள் சிறையில் இருந்த அவருக்கு ஜம்முவில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது.

கடந்த சனிக்கிழமை அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவரது காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டது. இதுகுறித்து காஷ்மீர் போலீஸார் கூறியதாவது:

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஜாமீனில் விடுதலையாகும் கைதிகளின் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படுகிறது. இதே நடைமுறை இந்தியாவில் முதல்முறையாக காஷ்மீரில் தொடங்கப்பட்டு உள்ளது.

நீதிமன்ற அனுமதியுடன் தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய குலாம் முகமதுவின் காலில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி உள்ளோம். இதன்மூலம் அவரது நகர்வுகளை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். புதிய திட்டத்தால் ஜாமீனில் விடுதலையாகும் தீவிரவாதிகள் தலைமறைவாவது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது தடுக்கப்படும். இவ்வாறு காஷ்மீர் போலீஸார் தெரிவித்தார்.

சிறைத் துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் சிறப்பு குழு கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி மத்திய உள்துறையிடம் விரிவான அறிக்கை சமர்ப்பித்தது. அதில் ஜாமீனில் விடுதலையாகும் கைதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நடைமுறையை காஷ்மீர் போலீஸார் உடனடியாக அமல் செய்துள்ளனர்.

நாட்டின் இதர மாநிலங்களிலும் இதே நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE