புதுடெல்லி: ஊழியர்களின் நலத்தை பேணுவதில் உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 2-வதுஇடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மெக்கென்சி ஹெல்த் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஊழியர்களின் உடல், மனம்,சமூக மற்றும் ஆன்மீக ஆரோக்கியம் மதிப்பிடப்பட்டது. அதன் மூலம் அளவிடப்பட்டதன் அடிப்படையில் ஊழியர்களின் நல்வாழ்வின் உலகளாவிய தரவரிசையில் ஜப்பான் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. ஜப்பானிய வணிக நிறுவனங்கள் வாழ்நாள் வேலைவாய்ப்பு மற்றும்வேலை பாதுகாப்பை வழங்குவதில் நற்பெயரை கட்டியெழுப்பியுள்ளன. எனினும் ஊழியர்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் அவர்கள் வேலைகளை மாற்றுவது என்பது கடினமாக இருக்கும் என்பதை இந்த மதிப்பீடு தெளிவுபடுத்தியுள்ளது.
30 நாடுகளில் 30,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஜப்பான் 25 சதவீத மதிப்பெண்களை மட்டுமே பெற்று கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. ஊழியர் நலன் பட்டியலில் துருக்கி அதிகபட்சமாக 78 சதவீத மதிப்பெண்ணை பெற்று முதலிடம் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியா 76 சதவீத மதிப்பெண்களைப் பெற்று இரண்டாவது இடத்திலும், சீனா 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளன. உலக சராசரி என்பது 57 சதவீத மதிப்பெண்ணாக இருந்தது. இவ்வாறு மெக்கென்சி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்எஸ் அண்ட் ஏடி இன்சூரன்ஸ் குரூப்பின் உறுப்பினர் ரோச்சிலி கோப் கூறுகையில், “ ஜப்பானில் பணியிடங்களில் திருப்தியின்மை, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு குறிப்பிடத்தக்க சிக்கல்கள்நிலவுகின்றன. அதிகரித்து வரும்குறுகிய கால ஒப்பந்த பணிகள்நிச்சயமற்ற தன்மையை தூண்டிவிட்டுள்ளது பணியாளர்களின் மனநிலையை வெகுவாக பாதித்துள்ளது’’ என்றார்.