உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

By செய்திப்பிரிவு

போபால்: உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மத்தியபிரதேச சட்டப் பேரவைக்கு வரும் 17-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பிந்த் மாவட்டம் கோஹாத் பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் லால் சிங் ஆர்யாவை ஆதரித்து கனேட்டா கிராமத்தில் நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவை காங்கிரஸ் ஆட்சி செய்தபோது வெளிநாடுகளில் உள்ள மக்கள், இந்தியாவை ஒரு வலுவிழந்த நாடாக பார்த்தனர். ஆனால் பாஜக தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர் நாடு வலிமையடைந்து வருகிறது. பிரதமர் மோடியின் நல்லாட்சியால் நாடு மிகப்பெரிய சக்தியாக வளர்ந்துள்ளது.

இந்தியாவின் பெருமை உலகம் முழுவதும் உயர்ந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்தியா பலவீனமான நாடு என்று கூறுவார்கள். அப்போது நாம் கூறிய வார்த்தைகளை உலக நாடுகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் நிலைமை இப்போது மாறிவிட்டது. நாம் வேகமாக வலிமையடைந்து வருகிறோம். சர்வதேச அமைப்புகளில் நாம் பங்கேற்கும் கூட்டங்களில் நாம் கூறும் வார்த்தைகளை கேட்கின்றனர்.

யாராவது, கீழ்த்தரமான செயலை செய்ய முயன்றால், அவர்களை எல்லையின் இந்தப் பக்கத்திலும், தேவைப்பட்டால் மறுபக்கத்துக்கும் சென்று இந்தியாவால் அழிக்க முடியும். உலகில் எந்தசக்தியாலும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது. பிந்த் மாவட்டத்தில் 5 குடும்பங்களில் ஒருவர் ராணுவத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். அவர்களது சேவையை நாடு போற்றும். அவர்களது குடும்பங்களுக்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE