“கர்நாடக முதல்வரை மாற்றும் கேள்வியே எழவில்லை” - அமைச்சர் பிரியங்க் கார்கே

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவை மாற்றும் கேள்வியே எழவில்லை என்று அம்மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பிரியங் கார்கே பேசினார். அப்போது, கர்நாடகாவின் முதல்வராவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரியங்க் கார்கே, "அதுகுறித்து கட்சி மேலிடம்தான் சொல்லவேண்டும். அவர்கள் என்னை முதல்வராக பொறுப்பேற்க கேட்டுக்கொண்டால், நான் அதனை மறுக்க மாட்டேன்" என்று தெரிவித்தார். இதற்கும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, "எங்களுடைய அரசு 5 ஆண்டுகளும் ஆட்சியில் இருக்கும். அந்த 5 ஆண்டுகளும் நானே முதல்வர் பதவியில் தொடருவேன்" என்று தெரிவித்திருந்தார்.

ஆளும் காங்கிரஸினரிடைய ஒரு பிரிவினருக்குள் இரண்டரை ஆண்டுகளில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த சந்தேகம் எழுந்த நிலையி்ல், முதல்வர் இவ்வாறு விளக்கமளித்தார். முதல்வர் பதவியை குறிவைத்து பேசப்பட்ட இதுபோன்ற பேச்சுக்களால் அம்மாநில அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்க் கார்கே, "கர்நாடக முதல்வர் குறித்து எந்த சர்ச்சையும் இல்லை. ஊடகங்கள்தான் அத்தனை குழப்பங்களுக்கும் காரணம். கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் என்பதில் காங்கிரஸ் கட்சி தெளிவாக இருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளின்படி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். எனவே, முதல்வரை மாற்றுவது என்ற கேள்விக்கே இடமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE