ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் மாயாவதி கட்சியின் போட்டியால் காங்கிரஸுக்கு பாதிப்பு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் (பிஎஸ்பி) போட்டியிடுகிறது. இதனால்,அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகிறது.

உத்தரப்பிரதேசத்தில் நான்கு முறை முதல்வராக இருந்தவர் மாயாவதி. தான் சார்ந்த பட்டியலின சமூகத்துக்காக குரல் கொடுப்பதாக அவரது பிஎஸ்பி உள்ளது. உபி.,யில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் பிஎஸ்பி தொடர்ந்து போட்டியிடுகிறது.

இதில், பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் சில எம்எல்ஏக்களை பிஎஸ்பி பெற்றது உண்டு. சில சமயம் இவரது கட்சியின் ஒரிரு எம்எல்ஏக்களும் ஒரு மாநிலத்தின் ஆட்சியை நிர்ணயிப்பது உண்டு. எனினும், இதன் பலன் கட்சிக்கு சேராமல் அந்த எம்எல்ஏக்கள் ஆளும் கட்சிக்கு தாவி விடுவதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில், மாயாவதியின் பிஎஸ்பி கட்சி ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிடுகிறது.

இம்மாநிலத்திலுள்ள 200 தொகுதிகளில் 38, தனித் தொகுதிகள் உள்ளன. இங்கு பிஎஸ்பியின் தாக்கம் ஓரளவுக்கு உள்ளது. குறிப்பாக, ஜெய்பூர், ஆழ்வர், பரத்பூர், தோல்பூர், கராவுலி, தவுசா மற்றும் சவாய் மாதேபூர் ஆகிய மாவட்டங்களில் பிஎஸ்பிக்கு ஆதரவு நிலவுகிறது.

இந்த மாவட்டங்களின் கடந்த தேர்தல்களில் சராசரியாக சுமார் 40 தொகுதிகளில் பிஎஸ்பிக்கு சுமார் பதினைந்தாயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த வாக்குகள் காங்கிரஸை பாதிக்கும் சூழல் ராஜஸ்தானில் உருவாகியுள்ளது.

கடந்த 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் பிஎஸ்பியின் வேட்பாளர்கள் 6 பேர் வெற்றி பெற்றனர். இவரது கட்சியினர் ஆதரவும் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெல்லோட்டுக்கு அதிக பலனை அளித்தது.

இவர்களை இரண்டாகப் பிரிக்க அரசியல் சூழ்ச்சி செய்து முதல்வர் கெலாட், அனைவரையும் காங்கிரஸில் சேர்த்துக் கொண்டார். இதன் காரணமாக, இந்தத் தேர்தலில் முதல்வர் கெலாட் மீது பிஎஸ்பியின் தலைவர் மாயாவதி கோபத்தில் இருக்கிறார்.

இந்த கோபத்தை காங்கிரஸ் மீது காட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சியான பாஜகவுக்கு இடையே முக்கியப் போட்டி உள்ளது. வழக்கமாக நிலவும் ஆளும் அரசுக்கு எதிரான எதிர்ப்பும் காண முடிகிறது. இச்சூழலில் மாயாவதி கட்சி தேர்தலில் காட்டும் தீவிரம், பாஜகவுக்கு பலனை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆறு தொகுதிகளை பெற்ற பிஎஸ்பி, 12 தொகுதிகளில் இரண்டாம் நிலை பெற்றிருந்தது. இதன் காரணமாக, காங்கிரஸில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் பிஎஸ்பியில் சேர்கின்றனர். இதுவும் காங்கிரஸுக்கு பெரும் சிக்கலாகி விட்டது. இந்தத் தேர்தலில் எவருடனும் கூட்டணி இல்லை என அறிவித்துள்ள பிஎஸ்பி தலைவர் மாயாவதி, 200 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளார்.

நவம்பர் 23 இல் ஒரே கட்டமாக நடைபெறும் இந்தத் தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 3 இல் வெளியாகிறது. இதே நாளில், தெங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோராம் ஆகிய மாநிலத் தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE