விபத்தில் உயிருக்குப் போராடிய இளைஞர்... உதவாமல் புகைப்படம் எடுத்த மக்கள் - டெல்லி அவலம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் சாலை விபத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவருக்கு உதவாமல், அவரிடம் இருந்து கேமரா உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டெல்லியின் பஞ்சசீல் என்கிளேவ் அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற 30 வயதான பியுஷ் பால் என்பவர் உயிரிழந்தார். ஆவணப்பட இயக்குநரான இவர் சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் தனது பைக்கில் என்கிளேவ் அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக அவரின் பைக்கும், குருகிராமைச் சேர்ந்த பன்டி என்பவர் ஓட்டிச் வந்த பைக்கும் மோதியுள்ளது. இருவரும் காயமடைந்து கீழே விழுந்துள்ளனர். இதில் பியூஷ் பால் படுகாயமடைந்த, சாலையோரம் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாலும், அந்த வழியாகச் சென்ற யாரும் பியூஷ் பாலுக்கு உதவ முன்வரவில்லை.

இதன்பின் பைக் டாக்சி ஓட்டும் ஒருவர், மற்ற சிலருடன் இணைந்து காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். சம்பவம் நடந்த அரைமணி நேரத்துக்குப் பிறகே போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த பியுஷ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இதனிடையே, விபத்து தொடர்பாக பேசியுள்ள பியுஷின் நண்பர் சன்னி போஸ், "பியுஷ் 20 நிமிடங்களுக்கும் மேலாக ரத்த வெள்ளத்தில் கிடநதுள்ளார். அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை. விபத்தை போட்டோ எடுக்கவும், வீடியோ எடுக்கவும் மட்டுமே செய்துள்ளனர். இரவு 9.30 மணியளவில் விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்து அரை மணி நேரம் கழித்தே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மக்கள் சரியான நேரத்தில் அவருக்கு உதவியிருந்தால் அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். அவரிடம் இருந்து மொபைல் போன் மற்றும் கேமரா ஆகியவற்றை சிலர் எதுத்துச்சென்றுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE