புதுடெல்லி: பாலின சமத்துவம்தான் அனைத்துஐ சமத்துவத்துக்கும் அடிப்படை என்றும், பாலின சமத்துவம் இல்லையென்றால் சமூகத்தில் சமத்துவம் இருக்காது என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
'இந்திய நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கு' என்ற தலைப்பில் மிராண்டா ஹவுஸின் 70-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், "நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கு மகத்தானது. அவர்களின் இருப்பு தானாகவே நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் நல்ல சூழலை அதிகரிக்கும். பெண்கள் தாங்கள் வாழும் வாழ்க்கையின் மதிப்புமிக்க அனுபவங்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் தங்களின் மதிப்புக்க பணியில் ஈடுபடுத்த முடியும். இது நிச்சயமாக பெரிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழிவகுக்கும். கொள்கைகளின் பரிணாம வளர்ச்சிக்கு நிர்வாகத்துக்கு இது உதவும்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது வரலாற்றில் ஒரு சகாப்த முன்னெடுப்பு. இது ஒரு பெரிய வளர்ச்சி. இது, தேசம் அதன் சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும்போது, நாம் உச்சத்தில் இருப்போம் என்பதை உறுதி செய்யும். மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டபோது 17 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை மாநிலங்களவையை வழிநடத்தத் தேர்ந்தெடுத்தேன்.
2019 பொதுத் தேர்தலில் மக்களவையில் அதிக எண்ணிக்கையிலான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த ஆண்டுகளில் பிரதமரின் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த பல முன்முயற்சிகள் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்துள்ளன. பெண் தலைவர்களை ஆக்கிரமித்து அவர்களை ஆண்களே இயக்கும் நிலை பெரும்பாலும் போய்விட்டது. இப்போது பெண் பிரதிநிதிகளுக்கான இருக்கையை ஆக்கிரமிக்க யாரும் துணிவதில்லை" என்று பேசினார்.