அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகிறார் அரவிந்த் கேஜ்ரிவால்: கைதாகலாம் என ஆம் ஆத்மி கட்சியினர் அச்சம்

By செய்திப்பிரிவு

டெல்லி: அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்று ஆம் ஆத்மி கட்சியினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் அவர் இன்று (நவ.2) ஆஜராகிறார். இந்நிலையில் அவர் கைது செய்யப்படலாம் என்று ஆம் ஆத்மி கட்சியினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக 6 மாதங்களுக்கு முன்னர் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் சிபிஐ இதே வழக்கு தொடர்பாக 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில் அவர் இன்று அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகிறார். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி நேற்று, இண்டியா கூட்டணித் தலைவர்களை பாஜக குறிவைத்துள்ளது. அதில் முதலில் கைதாவது அரவிந்த் கேஜ்ரிவாலாகத் தான் இருப்பார் என்று தெரிவித்திருந்தது.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சட்டா, "கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து மத்திய புலனாய்வு அமைப்புகள் பதிவு செய்த வழக்குகளில் 95 சதவீதம் எதிர்க்கட்சியினர் மீதானது.

இப்போது இண்டியா கூட்டணி அமைந்துள்ளதால் பாஜக நடுக்கம் கண்டுள்ளது. இண்டியா கூட்டணியின் பெரிய தலைவர்களை குறிவைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளது. அந்தத் திட்டத்தின்படி முதலில் கைதாபவராக அரவிந்த் கேஜ்ரிவால் இருக்கலாம்" என்று கூறியிருந்தார். டெல்லி அரசியல் களத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் வீட்டில் சோதனை: இதற்கிடையில் டெல்லி கேபினட் அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அவருக்குத் தொடர்பான 9 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சுங்கத் துறை சம்பந்தமான இந்த வழக்கில் அமைச்சர் ஆனந்த் ஹவாலா பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அதன் நிமித்தமாகவே சோதனை நடைபெறுகிறது.

வழக்கின் பின்னணி: டெல்லி அரசு, மதுபான விற்பனையை தனியாரிடம் வழங்க ஏதுவாக 2021-22 நிதியாண்டுக்கான புதிய மதுக்கொள்கையை கொண்டு வந்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை 2 குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதுவரை டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்து செய்யப்பட்ட மதுபான கொள்கை மூலம் கிடைத்த ரூ.100 கோடி லஞ்சப் பணத்தை, அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிகட்சி கோவாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக ஒரு குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தனி உதவியாளரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் முதல்வர் கேஜ்ரிவால் இன்று விசாரணைக்கு ஆஜராகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE