தொழிலதிபர் முகேஷ் அம்பானியிடம் ரூ.20 கோடி கேட்டு கொலை மிரட்டல்: மும்பை போலீஸார் வழக்கு பதிவு

By செய்திப்பிரிவு

மும்பை: ரூ.20 கோடி கேட்டு தொழிலதிபரான முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுதொடர்பாக மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. ரூ.20 கோடி கேட்டு கடந்த 27-ம் தேதி சதாப் கான் என்ற பெயரில் இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு ரூ.20 கோடி கொடுக்காவிட்டால் உங்களை (முகேஷ் அம்பானி) கொலை செய்வோம். நாட்டில் சிறந்த துப்பாக்கி சுடும் நபர்கள் எங்களிடம் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீஸார் அடையாளம் தெரியாத அந்த நபர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வருடம் பிஹாரில் இருந்து அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய நபரை மும்பை போலீஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE