2-ம் திருமணம் செய்ய அனுமதி அவசியம்: அரசு ஊழியர்களுக்கு அசாம் அரசு உத்தரவு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: அரசு ஊழியர்கள் 2-வது திருமணம் செய்ய விரும்பினால், அரசிடம் அனுமதி பெற வேண்டும் என அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாஜக ஆளும் அசாம் அரசு சார்பில் அதன் கூடுதல் தலைமைச் செயலாளர் நீரஜ் வர்மா, கடந்த 20-ல்உத்தரவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘முதல் மனைவி அல்லது கணவர் உயிருடன் உள்ளபோது, இரண்டாவது திருமணம் செய்ய விரும்பும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அதற்கான அனுமதி, அந்த நபருக்கான தனிச்சட்டத்தின்படி உறுதிசெய்த பின் அளிக்கப்படும். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான சட்டம் ஆகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் அரசின் இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அத்தகைய நபர்களுக்கு பணியிலிருந்து கட்டாய ஓய்வளிப்பதுடன், அவர்மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும், அவருக்கான ஓய்வூதியம் நிறுத்தப்படுவதுடன், இந்த குற்றத்திற்காக அபராதங்களும் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற சட்டம் 1965 முதல்ஏற்கெனவே மத்திய அரசின் பணியாளர்களுக்கு உள்ளது. இதேபோல், பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிலும் உள்ளன.இந்துமதச் சட்டப்படி அமைக்கப்பட்ட இந்த சட்டம், அனைத்து இந்துக்களுக்கும் பொருந்தும். சிறுபான்மை தனிச்சட்டங்கள் காரணமாக முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.இவற்றையும் மீறி ஏமாற்றும் வகையில் இரண்டாவது மணம் புரியும் சம்பவங்கள் நடப்பது உண்டு. ஆனால், அசாம் அரசின் புதிய உத்தரவில் தனிச்சட்டம் பின்பற்றுவோரும் புதிதாக அனுமதிபெறுவதும், தவறு செய்தவர்களை தண்டனைக்கு உட்படுத்துவதும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், எந்த வகையிலும் அசாம் அரசை ஏமாற்றி இரண்டாவது திருமணம் புரிந்து கொள்ளமுடியாத வகையில் இந்த சட்டம்நடைமுறைக்கு கொண்டுவரப் பட்டுள்ளது.

மேலும், பலதார மணம் புரிய அனுமதி அளிக்கும் முஸ்லிம் தனிச்சட்டத்தின்படி இரண்டாவது மணம் புரிபவர்களும் அனுமதி பெறுவது சிக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கள் சமூகத்தை குறிவைத்தே இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அசாம் முஸ்லிம்கள் கருது கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE