புனே: “என்னைப் பொறுத்தவரை பாஜகவில் உண்மையைப் பேசும் ஒரே நபர், அமைச்சர் நிதின் கட்கரி மட்டும்தான்” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுப்ரியா சுலே தெரிவித்திருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து அவரது அண்ணன் மகன் அஜித் பவார் தன்னுடைய ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்றார். அதோடு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் இணைந்து கொண்டார். அஜித் பவார் துணை முதல்வராகவும், அவருடன் சென்ற சில எம்.எல்.ஏ.க்கள் அமைச்சராக பதவி ஏற்றனர். இதனால் சரத் பவார்- அஜித் பவார் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோரி வருகின்றனர். இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுப்ரியா சுலே புனேவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "என்னைப் பொறுத்தவரை பாஜகவில் உண்மையைப் பேசும் ஒரே நபர் அமைச்சர் நிதின் கட்கரி மட்டும்தான்.
அதேபோல மகாராஷ்டிராவில் சிவசேனா என்ற ஒரே ஒரு கட்சிதான் இருக்கிறது. அதுவும் மறைந்த பால் தாக்கரேவால் உருவாக்கப்பட்டது. அவர் உயிருடன் இருக்கும்போதே உத்தவ் தாக்கரேயிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார். தற்போது அதன் நகல்தான் உள்ளது. ஆனால், மக்களுக்கு தங்கத்துக்கும், வெண்கலத்துக்கும் இடையிலான வேறுபாடு நன்றாகவே தெரியும்” எனத் தெரிவித்திருக்கிறார். அமைச்சர் நிதின் கட்கரி ஒரு நேர்காணலின்போது உண்மையான சிவசேனா குறித்து கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தக் கருத்தை கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.