புதுடெல்லி: ‘நியூஸ்கிளிக்’ செய்தி இணையதள ஆசிரியர் மற்றும் மனிதவள துறை தலைவருக்கு வரும் நவம்பர் 2-ம் தேதி வரை போலீஸ் காவல் வழங்கி டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
நியூஸ்கிளிக் செய்தி இணையதளம் சட்டவிரோதமாக சீன நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெறுவதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், டெல்லியில் உள்ள நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள், தொடர்புடைய நபர்களின் வீடுகளில் டெல்லி போலீஸார் கடந்த 3-ம் தேதி சோதனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மை ஆசிரியருமான பிராபிர் புர்காயஸ்தா மற்றும் மனிதவள துறை தலைவர் அமித் சக்கரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில் இருவரும் டெல்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, பிராபிர்மற்றும் அமித் சக்கரவர்த்தியிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் இருவருக்கும் 9 நாட்கள் போலீஸ் காவல் வழங்க வேண்டும் என டெல்லி போலீஸார் கோரிக்கை வைத்தனர்.
» கணை ஏவு காலம் 15 | நீ வேறு நான் வேற @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்
» காசாவில் இஸ்ரேல் குண்டு வீச்சு: 700-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
வழக்கறிஞர் வாதம்: நியூஸ்கிளிக் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அர்ஷ்தீப் சிங் குராணா, "இருவரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். எனவே, அவர்களுக்கு போலீஸ் காவல் வழங்கக் கூடாது" என எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் டெல்லி காவல் துறையின் வாதத்தை ஏற்றுக் கொண்ட கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஹர்தீப் கவுர், வரும் நவம்பர் 2-ம் தேதி வரை இருவருக்கும் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார்.