தேஜ்பூர்: தீவிரவாதத்துக்கு எதிராக உலகம் ஒன்றுபட வேண்டும் என இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் கொல்லப்பட்டனர். பிணைக் கைதிகளாக இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினரை ஹமாஸ் அமைப்பினர் சிறை பிடித்தனர். தொடர்ந்து ஹமாஸ் அமைப்பின் இருப்பிடமாக உள்ள பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
“தீவிரவாதத்துக்கு எதிராக உலகம் ஓரணியில் ஒன்றுபட வேண்டும். இதன் மூலம் அப்பாவி மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள்” என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்தப் போரில் இந்தியா, இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, திங்கட்கிழமை அன்று இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் சூழல் குறித்து பிரதமர் மோடி, ஜோர்டான் நாட்டின் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் தொலைபேசியில் கலந்துரையாடி இருந்தார்.