காத்மண்டு: இஸ்ரேலில் ஹமாஸ் நடத்தியத் தாக்குதலில் உயிரிழந்த 4 நேபாள மாணவர்களின் உடல்கள் காத்மாண்டுவுக்கு வந்தடைந்தன. மாணவர்களின் உடல் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது.
கடந்த 7-ஆம் தேதி முதல் ஹமாஸ் படைகளும், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் சூழலில், நேபாள நாட்டைச் சேர்ந்த 17 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேலுக்கான நேபாள தூதரகம் தெரிவித்தது. மேலும்,10 நேபாள மாணவர்கள் பலியாகி இருப்பதாக இஸ்ரேலில் உள்ள நேபாள தூதரகம் அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இஸ்ரேலில் ஹமாஸ் குழு நடத்தியத் தாக்குதலில் உயிரிழந்த 4 நேபாள மாணவர்களின் உடல்கள் காத்மாண்டு வந்தடைந்தன. இந்த மாணவர்களின் உடல் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது. இதையடுத்து, நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர், நேபாளத்துக்கான இஸ்ரேலிய தூதர் மற்றும் மற்ற அரசு அதிகாரிகளும் விமான நிலையத்தை அடைந்தனர்.
நேபாளத்துக்கான இஸ்ரேல் தூதர் ஹனான் கோடர், செய்தியாளர்களிடம் கூறியதாவது, “இஸ்ரேலில் 1,400 உடல்கள் இருக்கின்றன. அவற்றை அடையாளம் கண்டு வருகிறோம். அனைவரின் உடலையும் அடையாளம் காணமுடியவில்லை. இந்நிலையில், நேபாளத்தைச் சேர்ந்த நாராயண் பிரசாத் நியூபனே, லோகேந்திர சிங் தாமி, திபேஷ் ராஜ் பிஸ்டா மற்றும் ஆஷிஷ் சவுத்ரி ஆகிய நான்கு மாணவர்களின் உடல்கள் காத்மண்டுக்கு இன்று கொண்டு வரப்பட்டன.
» தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல்: நவீன ஏவுகணை தடுப்பு அமைப்புகளை அனுப்பிவைக்கும் அமெரிக்கா
» கணை ஏவு காலம் 12 | முரண்பாடுகளுக்கு இடையில் இருவர் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்
இந்த மாணவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹமாஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். அந்த பயங்கரவாதிகள் இஸ்ரேலை ஆக்கிரமித்து, எங்கள் கிராமத்துக்குள் நுழைந்து இந்த மாணவர்களைக் கொன்றனர். ஹமாஸின் தற்போதைய நிலைமை காசாவில் இனி தொடராது என்று எங்களுக்குத் தெரியும்’’ என்றார்.