சியாச்சின் மலைப்பகுதியில் பணியின்போது உயிரிழந்த அக்னிவீரர்: இந்திய ராணுவம் மரியாதை

By செய்திப்பிரிவு

சியாச்சின்: உலகின் மிக உயர்ந்த எல்லைப் பாதுகாப்புப் பகுதியான சியாச்சின் மலைப் பகுதியில் பணியாற்றி வந்த அக்னிவீரர் (Agniveer) பணியின்போது உயிரிழந்தார். அவருக்கு இந்திய ராணுவம் மரியாதை செலுத்தியுள்ளது.

சியாச்சினில் பணியின் போது அக்னிவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லே-வை தலைமையிடமாகக் கொண்ட இந்திய ராணுவத்தின் Fire and Fury படைப்பிரிவு தெரிவித்துள்ளது. அந்த அக்னிவீரரின் பெயர் கவாட் அக்‌ஷய் லக்ஷ்மண், மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது. அவரது மறைவுக்கு ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே மற்றும் அனைத்துப் படை வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காரகோரம் மலைத்தொடரில் சுமார் 20,000 அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனிப்பாறை உலகின் மிக உயர்ந்த ராணுவமயமாக்கப்பட்ட மண்டலமாக கருதப்படுகிறது. அங்கு பணிபுரியும் வீரர்கள் பனி மற்றும் பெருங் காற்றுடன் போராட வேண்டியிருக்கும். இது மிகுந்த சவால் நிறைந்த பகுதியாகும்.

அக்னிவீரர் கவாட் அக்‌ஷய் லக்ஷ்மணனின் மரணம் குறித்த சரியான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. அதிகாரபூர்வமாக விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து இந்திய ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில், "துயரமான இந்த நேரத்தில் உயிரிழந்த குடும்பத்தினருடன் உறுதியாக நிற்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

ஜூன் 14, 2022 அன்று ராணுவ வீரர்களை ராணுவத்தில் சேர்ப்பதற்காக அக்னிபாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட வீரர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE