ஆட்சியில் நீடிப்பதில்தான் மோடி அரசின் கவனம் இருக்கிறது; மக்கள் நலனில் அல்ல - பிரியங்கா காந்தி

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ஆட்சியில் நீடிப்பதில்தான் நரேந்திர மோடி அரசின் கவனம் இருக்கிறதே தவிர, மக்கள் நலனில் அல்ல என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 25-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தில் உள்ள சிக்ராய் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரியங்கா காந்தி, "ராஜஸ்தானில் பாஜக ஆட்சியில் இருந்தபோது இம்மாநிலத்திற்காக எத்தனை திட்டங்களைக் கொண்டு வந்தது? நரேந்திர மோடியும் பாஜகவும் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே இலக்கு; மக்கள் நலன் அல்ல. அவர்களுக்கு தங்களை வலுப்படுத்திக் கொள்வதில்தான் ஆர்வம் இருக்கிறது.

பாஜகவின் கொள்கை தற்போது எப்படி மாறி இருக்கிறது என்றால், ஏழைகளின் பைகளில் இருந்து பணத்தை எடுத்து மிகப் பெரிய தொழிலதிபர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான். எனவே, ராஜஸ்தான் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியில் நீடிக்க மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிதான் மாநிலத்தை ஒற்றுமைப்படுத்தும்.

காங்கிரஸ் கட்சியின் கடந்த காலத்தை மீண்டும் மீண்டும் விமர்சிப்பவராக நரேந்திர மோடி உள்ளார். உண்மையான தலைவர் என்பவர் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும்தான் பார்ப்பாரே தவிற கடந்த காலத்தை அல்ல. சேவை மற்றும் இரக்கத்தின் மூலம்தான் பொது நலத்திட்டங்களை சாதிக்க முடியும். வளர்ச்சி குறித்து பேசுவதற்குப் பதிலாக மதம் மற்றும் சாதி குறித்து பாஜக ஏன் பேசுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் அஷோக் கெலாட், மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்த்வா, மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோட்டாஸ்ரா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE