2001 முதல் ஒவ்வொரு ஆண்டும் 100 - 140 வீரர்கள் தற்கொலை: இந்திய ராணுவம் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் உள்ள ஒரு ராணுவ நிலையில் பணியில் இருந்த அம்ரித்பால் சிங் என்ற அக்னி வீரர் கடந்த 11-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவரது இறுதிச் சடங்கில் ராணுவ மரியாதை அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து ராணுவம் எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: தற்போதுள்ள நடைமுறைக்கு ஏற்ப, அந்த அக்னி வீரரின் உடல் மருத்துவ மற்றும் சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆயுதப்படைகள், அக்னிபாதை திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ வீரர்களுக்கு உரிய பலன்கள் மற்றும் மரியாதை தொடர்பாக வேறுபாடு காட்டியதில்லை.

ஆயுதப்படைகளில் துரதிருஷ் டவசமான தற்கொலை சம்பவங் கள் நிகழும்போது அந்த வீரரின் இறுதிச் சடங்கில் ராணுவ மரியாதை அளிக்கப்படுவதில்லை.

கடந்த 2001 முதல் ஒவ்வொரு ஆண்டும் 100 முதல் 140 வரையிலான வீரர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தவீரர்களுக்கு இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கான உடனடி நிதியுதவி உட்பட, குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுகிறது. இதற்கு முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது.

இவ்வாறு ராணுவம் கூறியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE