சிறுத்தையிடம் சிக்கிய 7 மாத குழந்தையை காப்பாற்றிய தாய்

By செய்திப்பிரிவு

புனே: மகாராஷ்டிர மாநிலம் ஜுன்னர் வனப்பகுதியை அடுத்த தார்ன் டேல் கிராமத்தைச் சேர்ந்த சோனல் கார்கல் என்ற பெண் ஆடு வளர்க்கிறார். சில தினங்களுக்கு முன்பு அந்த கிராமத்துக்கு அருகே உள்ள திறந்தவெளி நிலப்பகுதியில் இரவு நேரத்தில் ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு அங்கேயே தனது 7 மாத குழந்தை மற்றும் கணவருடன் தூங்கி உள்ளார்.

நள்ளிரவில் அருகில் உள்ள வனப்பகுதியிலிருந்து வந்த ஒரு சிறுத்தை குழந்தையை வாயில் கவ்விக் கொண்டு இழுத்துச் செல்ல முயன்றுள்ளது. குழந்தையின் அழுகுரலைக் கேட்டு தூக்கத்திலிருந்து எழுந்த சோனல், குழந்தையை சிறுத்தை இழுத்துச்செல்வதைக் கண்டு கூச்சலிட்டு கற்களை எடுத்து வீசி உள்ளார்.

இதனால் சிறுத்தை குழந்தையை விட்டுவிட்டு வயலுக்குள் தப்பி ஓடிவிட்டது. பிறகு காயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE