விதவை, முதியோர் மாத உதவி தொகை ரூ.5,016-ஆக உயர்த்தப்படும்: தெலங்கானாவில் தேர்தல் அறிக்கை வெளியிட்டார் முதல்வர் சந்திரசேகர ராவ்

By என். மகேஷ்குமார்

ஹைதராபாத்: பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா மாநில முதல்வருமான கே. சந்திரசேகர ராவ் நேற்று ஹைதராபாத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதில்,வரும் தேர்தலில் பிஆர் எஸ் கட்சி வெற்றி பெற்றால் முதியோர், விதவைகளுக்கான மாத உதவி தொகை ரூ.5,016ஆக உயர்த்தப்படும் என்றும், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளஏழைகளுக்கு கேஸ் சிலிண்டர் ரூ.400-க்கு விநியோகம் செய்யப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை சந்திரசேகர ராவ் காப்பி அடித்துள்ளார் என தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 30-ம்தேதி 119 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கெனவே அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி, பிற கட்சிகளை விட தேர்தலை சந்திப்பதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இக்கட்சியின் தலைவரும், தெலங்கானா மாநிலத்தின் முதல்வருமான கே. சந்திரசேகர ராவ், நேற்று ஹைதராபாத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான தெலங்கானா பவனில், வரும் தேர்தலுக்கான கட்சி அறிக்கையை வெளி யிட்டார். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

வறுமை கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் ரூ.5 லட்சம் எல்.ஐ. சி. காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும். இதன்மூலம் மாநிலத்தில் 93 லட்சம் குடும்பங்கள் பயன் அடைவர். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தற்போது ‘ரைத்து பந்து’ திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது ரூ.16 ஆயிரமாக உயர்த்தப்படும். ஏழை குடும்பத்திற்கும், ஊடகத்தினருக்கும் ரூ. 400க்கே சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்.

ஆசரா திட்டத்தின் கீழ் முதியோர், விதவைகள், யானைக்கால், எய்ட்ஸ் நோயாளிகள், கவுடு பிரிவினர் மற்றும் பீடி தொழிலாளர்களுக்கு இதுவரை மாதம் ரூ.2,016 உதவி தொகை வழங்கப்பட்டு வந்தது. இனி இது பிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைத்ததும் முதல் ஆண்டு ரூ. 3,016 ஆகவும், அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 500 வீதம் உயர்த்தி, இறுதியாக 5 ஆண்டுகளில் அவர்களுக்கு மாதம் ரூ.5,016 வீதம் நிதி உதவி வழங்கப்படும்.

மாற்று திறனாளிகளுக்கு தற்போது மாத உதவி தொகை ரூ. 4,016 வழங்கப்பட்டு வருகிறது. படிப்படியாக இது உயர்த்தப்பட்டு ரூ.6,016 வரை வழங்கப்படும்.

இலவச மருத்துவ திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.15 லட்சம் வரை இலவச சிகிச்சைகள் அளிக்கப்படும். சவுபாக்கியா லட்சுமி திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்கள் அனைவருக்கும் மாத உதவி தொகையாக ரூ.3,000 வழங்கப்படும். அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு மாதா மாதம் ரேஷன் கடைகள் மூலம் உயர் தர அரிசி விநியோகம் செய்யப்படும்.

ஆட்சிக்கு வந்ததும் மேலும் ஒரு லட்சம் பேருக்கு 2 படுக்கை அறை கொண்ட இலவச வீடு வழங்கப்படும். வீட்டு மனை உள்ளவர்களுக்கு வீடுகட்டி கொள்ள ரூ. 5 லட்சம் இலவசமாக வழங்கப்படும். அனாதை குழந்தைகளை அரசே தத்து எடுத்து அவர்களை உயர் கல்வி வரை இலவசமாக படிக்க வைக்க உள்ளது.

ஆதலால், இனி அவர்களை அனாதை குழந்தைகள் என கூற முடியாதபடி அரசு குழந்தைகள் என அழைக்க வேண்டும் எனவும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE