6 ஆண்டுகளில் இல்லாத அளவாக வேலையின்மை 3.2 சதவீதமாக சரிவு: மத்திய அரசு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்தியாவில் வேலையின்மை 3.2 சதவீதமாக சரிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் சார்பில் ஆண்டுதோறும் பணியாளர் கணக்கெடுப்பு கடந்த 2017 முதல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஜூலை 2022 முதல் ஜூன் 2023 வரையிலான காலகட்டத்தின் வேலையின்மை குறித்த புள்ளி விவரத்தை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் வேலையில்லாதவர்கள் 3.2 சதவீதம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இத்தகைய கணக்கெடுப்பு தொடங்கிய 6 ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த அளவாக பதிவாகி உள்ளது.

2021-22ல் 4.1 சதவீதமாக இருந்த வேலையின்மை, 2020-21ல் 4.2 சதவீதமாக இருந்தது. 2019-2020ல் இது 4.8 ஆகவும், 2018-19ல் 5.8 சதவீதமாகவும், 2017-18ல் 6 சதவீதமாகவும் வேலையின்மை இருந்துள்ளது. இதில் இருந்து ஆண்டுக்கு ஆண்டு வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது தெரிய வந்துள்ளது.

கிராமப்புறங்களில் 2017-18ல் 5.3 சதவீதமாக இருந்த வேலையின்மை, 2022-23ல் 2.4 சதவீதமாக குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் நகர்ப்புறங்களில் 7.7 சதவீதமாக இருந்த வேலையின்மை, 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியாவில் ஆண்களுக்கான வேலையின்மை 6.1 சதவீதத்தில் இருந்து 3.3 சதவீதமாகவும், பெண்களுக்கான வேலையின்மை விகிதம் 5.6 சதவீதத்தில் இருந்து 2.9 சதவீதமாகவும் இந்த காலகட்டத்தில் குறைந்துள்ளது.

2017-18ல் 49.8 சதவீதமாக இருந்த பணியாளர் பங்கேற்பு விகிதம் 2022-23ல் 57.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் 2017-18ல் 50.7 சதவீதமாக இருந்த பணியாளர் பங்கேற்பு விகிதம், 2022-23ல் 60.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் 2017-18ல் 47.6 சதவீதமாக இருந்த பணியாளர் பங்கேற்பு விகிதம் 2022-23ல் 50.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE