பெங்களூரு: கர்நாடகாவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலை குறித்து மத்திய குழு நேற்று ஆய்வு நடத்தியது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், ''கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 236 வட்டங்களில் 195 வட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளை மத்திய அரசு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். இதற்காக மத்திய நிபுணர் குழுவை கர்நாடகாவுக்கு அனுப்ப வேண்டும்'' என கோரினார்.
இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு கர்நாடகாவின் வறட்சி நிலையை ஆய்வு செய்ய மத்திய விவசாயத்துறை இணைச் செயலாளர் அஜித்குமார் சாஹூ தலைமையில் மத்திய நீர்வளத்துறை நிபுணர் டி.ராஜசேகர், மத்திய நீர் ஆணையத் தலைவர் அசோக் குமார் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய நிபுணர் குழுவை கர்நாடகாவுக்கு அனுப்பியுள்ளது.
இந்த குழுவினர் நேற்று முதல்வர் சித்தராமையாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது சித்தராமையா, ''கர்நாடகாவில் நிலவும் வறட்சியால் ரூ.30 ஆயிரத்து 432 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு முதல்க்கட்டமாக ரூ.4 ஆயிரத்து 860 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து மத்திய நிபுணர் குழுவை சேர்ந்த அஜித் குமார் சாஹூ, டி.ராஜசேகர், அசோக் குமார் தலைமையில் அதிகாரிகள் 3 குழுவாக பிரிந்து கர்நாடகாவில் 28 மாவட்டங்களில் ஆய்வை தொடங்கியுள்ளனர். இதன்பிறகு அக்.9ம் தேதி மீண்டும் முதல்வர் சித்தராமையா, விவசாயத் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.