புதுடெல்லி: மகாத்மா காந்தி பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அரசு விடுமுறை என்பதால் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் நேற்று பொற்கோயில் சென்று பிரார்த்தனை செய்தார். பின்னர் பக்தர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் உணவு கூடத்துக்கு சென்றார். அங்கு பாத்திரங்களை சுத்தப்படுத்தி சேவை செய்தனர். அதுபோல் ராகுல் காந்தியும் நேற்று சேவை செய்தார். இந்தகாட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இதுகுறித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா, எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘பஞ்சாப் மாநிலத்துக்கு ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் வந்தார். இது அரசியல் பயணம் அல்ல. அவர் ஆன்மிக பயணமாக வந்துள்ளார். பொற்கோயிலில் பிரார்த்தனை செய்தார். அவருடைய தனிப்பட்ட விவகாரங்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.