பிஹார் மக்கள் தொகையில் இபிசி, ஓபிசி பிரிவினர் 63% : சாதிவாரி கணக்கெடுப்பில் தகவல்

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை அம்மாநில அரசு இன்று (அக்.2) வெளியிட்டுள்ளது. அதன்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மாநில மக்கள் தொகையில் 63 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

பிஹார் அரசின் வளர்ச்சித் துறை ஆணையர் விவேக் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மாநில மக்கள் தொகையில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (இபிசி) 36 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 27.13 சதவீதம் உள்ளனர். எஸ்.சி மக்கள் தொகை 19.65 சதவீதமும், எஸ்.டி. மக்கள் தொகை 1.68 சதவீதமும் உள்ளது. மாநிலத்தில் இந்துக்களின் மக்கள் தொகை 81.99 சதவீதமும், முஸ்லிம் மக்கள் தொகை 17.70 சதவீதமும் உள்ளனர். இந்தத் தகவல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்ட தகவல்களே. எந்தவிதமான பகுப்பாய்வும் செய்யப்படவில்லை என்று அறிக்கையை வெளியிட்ட விவேக் சிங் தெரிவித்துள்ளார்.

பிஹார் அரசு கடந்த ஜனவரி மாதம், மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. இந்தக் கணக்கெடுப்பில் பிஹார் மாநிலத்தில் உள்ள குடும்பங்களின் சாதியுடன் அவர்களின் பொருளாதார நிலையும் பதிவு செய்யப்பட்டது. மேலும் மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களின் 12.70 கோடி மக்களின் மதிப்பிடப்பட்ட சமூக பொருளாதார நிலை குறித்த தரவுகளையும் சேகரித்தது. கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு சமூக பொருளாதாரத்துடன் கூடிய சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியது என்றாலும் அதன் தகவல்கள் இன்றுவரை வெளியிடப்படவில்லை. இதனிடையே இத்தகைய கணக்கெடுப்புகளின் செல்லுபடியாகும் தன்மை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE