புவிக்கு அப்பால் 9.2 லட்சம் கி.மீ.தொலைவில் ஆதித்யா விண்கலம்: சூரியனின் எல் 1-ஐ நோக்கி சீரான பயணம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆதித்யா எல்-1 விண்கலம் புவியின் ஈர்ப்பு மண்டலத்தை விட்டு முழுமையாக விடுபட்டு, சூரியனின் எல்-1 புள்ளியை நோக்கி சீரான வேகத்தில் செல்வதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு ஆய்வு மையத்தில் இருந்து விண்கலத்தில் உள்ள உந்துவிசை இயந்திரங்கள் இயக்கப்பட்டு, அதன் புவி நீள்வட்ட சுற்றுப்பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

இதையடுத்து ஆதித்யா விண்கலத்தை புவி நீள்வட்டப் சுற்றுப்பாதையில் இருந்து செப்டம்பர் 19-ம் தேதி விடுவித்து, சூரியனை நோக்கி செல்லும் வகையில் அதன்செயல்பாடு மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது 11 நாட்கள் பயணத்துக்கு பின்னர் முழுமையாக புவியின் ஈர்ப்பு விசை மண்டலத்தை விட்டு விண்கலம் வெளியேறியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கூறும்போது, ‘’புவியில் இருந்து 9.24 லட்சம்கி.மீ தொலைவு வரையான பகுதிகளில் அதன் ஈர்ப்பு தாக்கம் இருக்கும். அந்த வகையில் ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியில் இருந்து9.2 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் பயணித்து, வெற்றிகரமாக புவியின் ஈர்ப்பு மண்டலத்தை கடந்துள்ளது.

இஸ்ரோ பூமியின் ஈர்ப்பு மண்டலத்துக்கு வெளியே ஒரு விண்கலத்தை அனுப்புவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் செவ்வாய் கிரக ஆய்வுக்காக செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலமும் பூமியின் ஈர்ப்பு மண்டலத்தை கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து புவியில் இருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள சூரியனின் எல்-1 பகுதியை நோக்கி விண்கலம் சீரான வேகத்தில் பயணித்து வருகிறது. எல்-1 பகுதி அருகே சென்றதும் விண்கலம் அதை மையமாக கொண்ட சூரிய ஒளிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கிருந்தபடியே எல்-1 பகுதியை மையமாக கொண்ட சுற்றுப்பாதையில் வலம் வந்தவாறு சூரியனின் கரோனா மற்றும்போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் பகுதிகளை ஆதித்யா ஆய்வு செய்யும். இதற்காக அதில் 7 விதமான ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE