புதுடெல்லி: "மகளிர் மசோதா சட்டமாகியிருக்கலாம். ஆனால் இது நடைமுறைக்கு வர பலவருடங்களாகும். இது ஒரு கேலியான மாயை" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாகியிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. மசோதா சட்டமாகியிருக்கலாம். ஆனால் இச்சட்டம் நடைமுறைக்கு வர பல வருடங்களாகும். 2029 -ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு பல வருடங்கள் நடைமுறைக்கு வராத சட்டத்தால் யாருக்கு என்ன பயன்? இந்த சட்டம் ஒரு கேலியான மாயை, இது கிண்ணத்து தண்ணீரில் தெரியும் நிலவின் பிரதிபலிப்பு. எல்லோரும் சொல்வது போல இது வெறும் தேர்தல் மாயை தான்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்ட அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தார். இனி இச்சட்டம், அரசியலமைப்பு (106-வது திருத்தம்) சட்டம் என அறியப்படும். அதன் விதிகளின் படி, அரசிதழில் அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவிக்கும் தேதியில் இருந்து இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் மசோதாவாக இம்மாதம் நிறைவேற்றப்பட்டது.
» காவிரி பிரச்சினை | குடகு மாவட்டத்தில் எதிரொலிக்காத பந்த் - வாட்டாள் நாகராஜ் கைது
» பசுக்களை அடிமாடுகளாக விற்பதாக குற்றச்சாட்டு: ரூ.100 கோடி கேட்டு மேனகா காந்திக்கு இஸ்கான் நோட்டீஸ்
மக்களவையில் இம்மசோதா கடந்த 19-ம் தேதியும் மாநிலங்களவையில் 21-ம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் இதற்கு ஆதரவாக 454 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஏஐஎம்ஐஎம் கட்சியின் 2 எம்.பி.க்கள் மட்டுமே எதிராக வாக்களித்தனர். முஸ்லிம் பெண்கள் மற்றும் ஓபிசி பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று அக்கட்சி காரணம் கூறியது. காங்கிரஸ் கட்சியும் ஓபிசி பெண்களுக்கு உள்ஒதுக்கீட்டை வலியுறுத்தியது.
புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு பிறகே மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்ற நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் 2024 மக்களவைத் தேர்தலிலேயே இதனை அமல்படுத்த வலியுறுத்தினர். இதையடுத்து இம்மசோதா மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டு, கடந்த 21-ம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 215 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் ஆகும் என்பதால் 2029 தேர்தலில் மகளிர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.