பிரதமர் விஸ்வகர்மா திட்டம் | 10 நாட்களில் 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் நாராயண் ரானே

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்ட பத்து நாட்களுக்குள் 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்துள்ளார்.

பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தின் வெற்றி குறித்த தகவல்களை தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) வெளியிட்டுள்ள நாராயண் ரானே, "பிரதமர் விஸ்வகர்மா திட்டம் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் விளைவு. திட்டம் தொடங்கப்பட்ட பத்து நாட்களுக்குள் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களைப் பெறுவது திட்டத்தின் வெற்றி; மிக உயர்ந்த முக்கியத்துவத்திற்கு ஒரு சான்று.

பிரதமர் விஸ்வகர்மா திட்டம், சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய விஸ்வகர்மா சகோதர சகோதரிகளின் விரிவான வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும். இது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அவர்களின் இழந்த அடையாளத்தை மீட்டெடுக்கும். இந்த திட்டத்தின் மூலம் விஸ்வகர்மா சகோதர சகோதரிகளுக்கு பயிற்சி, கருவிகள் மற்றும் பிணையற்ற கடன்கள் வழங்கப்படும். பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்த பிறகு, திட்டத்தின் அனைத்து நன்மைகளும் விஸ்வகர்மா சகோதர சகோதரிகளுக்கு வழங்கப்படும்.

பாரம்பரிய கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதையும், அவர்களின் தயாரிப்புகளை உள்நாடு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு கொண்டு செல்வதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 18 வகையான கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் பயனடைவார்கள். பயனாளிகளுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, பயிற்சியின் போது, தினமும், 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மேலும், கருவிகள் வாங்க 15,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். பயனாளிகள் ரூ.3 லட்சம் வரை பிணையில்லாக் கடன் பெற தகுதியுடையவர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE