பிஎஃப்ஐ அமைப்பினரின் இடங்களில் திடீர் சோதனை

By செய்திப்பிரிவு

கொச்சி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசு 2022 செப்டம்பர் 27-ம் தேதி தடை விதித்தது. நாடு முழுவதும் பிஎஃப்ஐ அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அமைப்பினரின் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து அமலாக்கத் துறையும் விசாரித்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு, திரிச்சூர் ஆகிய 4 மாவட்டங்களில் பிஎஃஐ அமைப்பினர் தொடர்புடைய இடங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். திரிச்சூரில் சாவக்காடு, எர்ணாகுளத்தில் கும்பலம் மற்றும் மலப்புரத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடந்தது.

பிஎஃப்ஐ அமைப்பினர் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் திரட்டிய பணத்தை சட்டப்பூர்வமாக மாற்ற மூணாறில் குடியிருப்பு திட்டம் ஒன்றை உருவாக்குவதாக அமலாக்கத் துறை கண்டறிந்தது. இதன் அடிப்படையில் மூணாறு வில்லா விஸ்டா என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2.53 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை கடந்த ஆகஸ்ட் மாதம் முடக்கியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE