இந்தியாவை துல்லியமாகக் காட்டும் ‘எக்ஸ்-ரே’ தான் சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி

By செய்திப்பிரிவு

பிலாஸ்பூர்(சத்தீஸ்கர்): இந்தியாவை துல்லியமாகக் காட்டும் எக்ஸ்-ரே (X-ray) ஆக சாதிவாரி கணக்கெடுப்பு இருக்கும் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் நாட்டில் எஸ்.சி. மக்கள், எஸ்.டி. மக்கள், ஒபிசி மக்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை நம்மால் சரியாக தெரிந்து கொள்ள முடியம்.

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எக்ஸ்-ரே போன்று இந்தியாவை துல்லியமாகக் காட்டும். தற்போது மத்திய அரசின் அமைச்சக செயலர்கள் 90 பேரில் 3 பேர் மட்டுமே ஒபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். எனவே, இதைச் சுட்டிக்காட்டி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஏன் அஞ்சுகிறீர்கள்; மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகளை பகிரங்கமாக பகிருங்கள் என்று சொன்னேன். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் நடத்துவோம். இது எனது வாக்குறுதி.

ரிமோட் கன்ட்ரோலின் பட்டனை நாம் வெளிப்படையாக அழுத்துவோம். ஆனால், பாஜக ரிமோட் கன்ட்ரோலை ரகசியமாக அழுத்தும். பாஜக ரகசியமாக ரிமோட் கன்ட்ரோலை அழுத்தியதை அடுத்தே, மும்பை விமான நிலையம் அதானிக்கு கிடைத்தது. பொதுத் துறை நிறுவனம் தனியார் நிறுவனமாக மாறியது. மக்களவையில் பிரதமர் மோடியிடம் அதானி குறித்து கேள்வி எழுப்பினேன். அதற்கு எனக்கு கிடைத்த பதில்தான், எம்.பி பதவி நீக்கம்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் பொதுமக்களே தலைமை வகிக்கின்றனர். நமது அரசுகள் அதானியால் இயங்கவில்லை. எங்களின் அனைத்து ரிமோட் கன்ட்ரோல்களும் பொதுமக்களின் பார்வைக்கு உட்பட்டவை" என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, "இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி உறுதியாக ஆட்சி அமைக்கும். தெலங்கானாவிலும் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தானைப் பொறுத்தவரை போட்டி சமமாக இருக்கும்" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE