பட்டியலினப் பெண்ணின் ஆடைகளை அகற்றி, அடித்து, சிறுநீர் கழிக்கப்பட்ட வன்கொடுமை: பிஹாரில் அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹாரில் ரூ.1,500 கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டவர் மீது போலீஸீல் புகார் கொடுத்ததற்காக பட்டியலினப் பெண் ஒருவர் நிர்வாணப்படுத்தி, தாக்கப்பட்டு, வாயில் சிறுநீர் கழிக்கப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு பிஹார் தலைநகர் பாட்னாவின் குஷ்ருபூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, "பிரமோத் சிங் என்பவரிடம் எனது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரூ.1,500 கடன் வாங்கினார். அந்தப் பணத்தை நாங்கள் வட்டியுடன் திருப்பிச் செலுத்திவிட்டோம். ஆனால், பிரமோத் மற்றும் அவரது மகன் எங்களிடம் தொடர்ந்து பணம் கேட்டு நச்சரித்தனர். அதை ஏற்க மறுத்துவிட்டோம். இதனால், என்னை தூக்கிச் சென்று நிர்வாணப்படுத்தித் தாக்கினர். பிரமோத் அவரது மகனை அழைத்து என் வாயில் சிறுநீர் கழிக்கச் சொன்னார். அவரும் அப்படிச் செய்தார். அதன்பின்னர் ஒருவழியாக அங்கிருந்து தப்பித்து வந்தேன்" என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவர் கூறுகையில், "அந்தப் பெண் ரூ.1500-ஐ வட்டியுடன் திருப்பிக் கொடுத்தும் கூட கூடுதல் வட்டி கேட்டுள்ளனர். கொடுக்காவிட்டால் ஊருக்கும் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச் செல்வோம் என்றனர். இதனால், பணம் தருவதை மறுத்ததோடு மட்டுமில்லாமல் அப்பெண் மொபைல் போன் மூலம் போலீஸில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் சனிக்கிழமை கிராமத்துக்கு போலீஸ் வந்து விசாரித்தது. இது பிரமோத் அவரது மகனுக்கு ஆத்திரமூட்டியது. சனிக்கிழமை இரவு 10 மணியளவில் அவர் வீட்டுக்குச் சென்ற பிரமோத், அவரது மகன் அவர்களது வீட்டுக்கு தூக்கிச் சென்றனர். அங்கே அந்தப் பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர்" என்றார்.

இது தொடர்பாக காவல் துறை தரப்பில், பிரதான குற்றாவாளிகளான பிரமோத் சிங், அவரது மகன அன்சு சிங் தலைமறைவாகியுள்ளனர். அவரைத் தேடி வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாட்னா காவல் கண்காணிப்பாளர் ராஜீவ் மிஸ்ரா, "நாங்கள் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். தொடர்ந்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE