புவனேஸ்வர்: 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். 2019-ம் ஆண்டு தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றது. அடுத்த நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த 28 எதிர்க்கட்சிகள் ‘இண்டியா’ என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இந்நிலையில் 2024-ம் ஆண்டு தேர்தலிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியைக் கைப்பற்றும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “2024-ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அதன் 25-வது ஆண்டை நிறைவு செய்கிறது. அப்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களைக் கைப்பற்றும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். அடுத்த ஆண்டு நடைபெறும் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவே ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்தார்.