உதயநிதி மன்னிப்பு கேட்காவிட்டால் தப்ப முடியாது: அயோத்தி துறவி பரமஹன்ஸ் எச்சரிக்கை

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: சனாதனத்தை விமர்சித்தமைக்கு உதயநிதி மன்னிப்பு கேட்கவில்லை எனில், அவர் அதாள பாதாளத்திற்கு சென்றாலும் தப்ப முடியாது என அயோத்தி துறவியான ஜெகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா சவால் விடுத்துள்ளார். அயோத்தி தபஸ்வீமடத்தின் தலைவருமான அவரிடம் ‘இந்து தமிழ் திசை’ எழுப்பியக் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது மீண்டும் சனாதனத்திற்கு எதிராகப் பேசியுள்ளாரே?

இதுவே மற்ற மதங்களை உதயநிதி விமர்சித்திருந்தால் அவர் இன்று என்னவாகி இருப்பாரோ தெரியவில்லை. பாஜகவின் தலைவர் நுபுர் சர்மா, இஸ்லாமியர்களின் ஹதீஸ் மறையில் இருப்பதைத்தான் எடுத்துரைத்தார். ஆனால் அவருக்கு கிளம்பிய எதிர்ப்பால் நுபுரை பாஜக கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது. உதயநிதி மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

சனாதனம் மீதான விமர்சனத்திற்கு எவருக்கும் வராத கோபம் உங்களுக்கு வந்தது ஏன்?

தமிழக அமைச்சர் உதயநிதி தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு விடுவார் என எதிர்பார்தேன். இதை அவர் செய்யாததால்தான் நான் அவரது கழுத்தை வெட்டி வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு என அறிவித்தேன். இதற்கு பின்பும் அவர் தனது தலையை சீவ ரூ.10 கோடி தேவையல்ல, 10 ரூபாய் சீப்பு போதுமானது எனக் கிண்டலடித்தார். இதனால் 2 தினங்களுக்கு முன் ஆயிரக்கணக்கான ஆச்சாரியார்கள் கொண்ட தர்மசபையை கூட்டி ஆலோசனை செய்தேன். இதன்படி அவர் தனது வார்த்தைகளை வாபஸ் பெற்றால் நாமும் நம் எச்சரிக்கையை வாபஸ் பெறுவோம். இல்லையெனில் அதள பாதாளத்தில் ஒளிந்திருந்தாலும் அவர் எங்களிடமிருந்து தப்ப முடியாது. அவர் தலையை கொய்ய நான் அறிவித்த ரூ.10 கோடியை தற்போது ரூ.25 கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளேன்.

ஒரு துறவியாக உங்களுக்கு இந்த அளவுக்கு கோபம் வரலாமா? இதை நீங்கள் அமைதி வழியில் சட்டப்படி உதயநிதிக்கு புரிய வைக்காதது ஏன்?

சீதையை தூக்கிச் சென்றது தவறு என ராவணனுக்கு புரிந்திருந்தால் அவரை ராமர் கொன்றிருக்க மாட்டார். இன்னும் கூட எங்கள் மனதில் உதயநிதி மீது தயவு உள்ளது. அவர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு திருந்த நாம் விரும்புகிறோம். சனாதனத்தின் மீது நம்பிக்கை இல்லை எனில் உதயநிதி வேறு மதத்திற்கு மாறிக் கொள்ளலாம். இதை விடுத்து அவர் சனாதனத்தை ஒழிப்பேன் எனக் கூறுவது அசம்பாவிதம் ஆகும், இது உலகம் முழுவதிலும் அமைதியை குலைக்கும் செயலாகும். இவருக்கு பின் ஆ.ராசாவும் இதேபோன்று விமர்சித்தது தவறு.

பாரதத்தில் சனாதனத்தை மதித்து அதன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் சுமார் 120 கோடி பேர் உள்ளனர். 5,000 ஆண்டுகளுக்கு முன் சனாதனம் மட்டுமே இருந்தது. வேறு எந்த மதங்களும் இல்லை. இதன் குறிப்பு பழம்பெருமை வாய்ந்த ஆன்மிக நூலான ரிக்வேதத்திலும் உள்ளது. சனாதனத்தை ஒழிக்க நினைப்பவர் அதை மதிக்கும் நாட்டின் 80% மக்களை அழிக்க முயல்வதாகவே அர்த்தம்.

உங்கள் மீது பதிவான வழக்கின் விசாரணைக்கு நீங்கள் அழைக்கப்பட்டால் தமிழகம் வருவீர்களா?

கண்டிப்பாக வருவேன். ஏனெனில், நாம் சட்டத்தை மதிப்பவர்கள். இதற்குமுன் சனாதனத்தை விமர்சித்த உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவருக்கு பதில் அளிக்கும் வகையில் தானே நம் நடவடிக்கை இருந்தது. எனது கொடும்பாவி எரித்ததுடன் என் மீது வழக்குகள் பதிவு செய்திருப்பதும் எனக்கு தெரியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE