சான் பிரான்சிஸ்கோவில் இந்திய தூதரகத்தை தாக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகைப்படங்களை வெளியிட்டது என்ஐஏ

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்களின் புகைப்படங்களை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வெளியிட்டுள்ளது.

இது குறித்து தேசிய புலனாய்வு முகமையின் செய்தித் தொடர்பாளரின் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட பதிவில், "தேடப்பட்டு வரும் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைக்காக அவர்களைப் பற்றி அடையாளம் தெரிந்துகொள்ளவும், தகவல் சேகரிக்கும் வகையிலும் நாங்கள் மூன்று செய்திகளை வெளியிட்டுள்ளோம். இதில் முதல் இரண்டு பதிவுகளில் இரண்டு குற்றவாளிகளின் புகைப்படங்கள் உள்ளன. மூன்றாவது உள்ள பதிவில், பிற வழக்குகளில் தொடர்புடைய மற்ற ஆறு பேரின் புகைப்படங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் பற்றி தகவல் தருபவர்களின் அடையாளங்கள் ரகசியமாக காக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கனடாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வெளியே கடந்த மார்ச் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அங்கிருந்த இந்திய வம்சாவளி பத்திரிகையாளர் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுபோல அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த மார்ச் 20-ம் தேதி தாக்குதல் நடத்தினர்.

மேலும், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வெளியே சமீபத்தில் போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சாந்துவுக்கு மிரட்டல் விடுத்தனர். குறிப்பாக, கடந்த 1994-ம் ஆண்டு முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்குக்கு ஏற்பட்ட நிலை ஏற்படும் எனமிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக தாக்குதல் அல்லது மிரட்டல் விடுப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது” என கூறப்பட்டிருந்தது.

இதனிடையே, கனடா மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் மார்ச் மாதம் நடந்த தாக்குதல் தொடர்பாக டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவினர், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், காலிஸ்தான் அமைப்பினருக்கு எதிரான இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றி டெல்லி காவல் துறை உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக, ஐஎன்ஏ ஜூன் மாதத்தில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பிரிவு 13-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து தனது விசாரணையைத் தொடங்கியது. பின்னர், சம்பவம் குறித்த விசாரணைக்காக என்ஐஏ குழு ஒன்று கடந்த மாதத்தில் சான் பிரான்சிஸ்கோ சென்றது. அங்கு இந்திய தூதரகத்திலுள்ள உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்தனர். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்தனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாங்கள் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து மேலும் சில குற்றவாளிகளை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம். மேலும் பயணிகள், விமான பணியகத்தின் உதவியையும் நாடியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

இதனிடையே, மார்ச் 19-ம் தேதி லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களில் 45 பேரின் புகைப்படங்களை வெளியிட்ட இரண்டு மாதத்துக்கு பின்னர், ஐஎன்ஏ 15 பேரை அடையாளம் கண்டு, அவர்கள் மீது லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடுவதற்காக அந்நபர்கள் குறித்த விபரங்களை இமிகிரேஷன் துறைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

இதனிடையே, மறு அறிவிப்பு வரும் வரை கனடா நாட்டினருக்கு விசா வழங்குவது இன்று (செப்.21) முதல் நிறுத்தம் செய்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. | வாசிக்க > மறு அறிவிப்பு வரும் வரை கனடா நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்: மத்திய அரசு அதிரடி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE